கம்மன்பில பதவி துறக்கவேண்டும்’ நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை சாகர மீண்டும் அறிவிப்பு!
” எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கான பொறுப்பையேற்று வலுசக்தி அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இன்னும் இருக்கின்றேன். கட்சியின் நிலைப்பாடும் அதுவே.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது மக்களின் கட்சியாகும். இரகசியமாக செய்யமாட்டோம். செய்வதை வெளிப்படையாகவே செய்வோம் – எனவும் அவர் கூறினார்.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பையடுத்து மொட்டு கட்சியின் செயலாளர் வெளியிட்ட அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசாங்கத்துக்குள்ளும் சலசலப்பை உருவாக்கியது.
இந்நிலையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மீண்டும் சர்ச்சையைக் கிளம்பும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சாகர.