உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் மொட்டு கட்சி கோரிக்கை!
கொவிட் நெருக்கடி காரணமாக பொது மக்கள் பொருளாதார ரீதியாக சிரமத்துக்கு உள்ளகியுள்ள சந்தர்ப்பத்தில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்தும் வகையில் தீர்மானத்தை எடுத்து அரசை சிரமத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியை கைப்பற்றி நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்லும் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் எமது கட்சி மற்றும் அதன் தலைவரை அபகீர்த்திக்கு உள்ளாக்கியமை தொடர்பில் பொதுஜன பெரமுன சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மேலும் ,எனவே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் உதய கம்மன்பில நேரடியாக பொறுப்பு கூறவேண்டும் எனவும் இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தியமை தொடர்பில் முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் பொதுஜன முன்னணி கோரியுள்ளது.