ஆய்வகத்தில் இருந்து கசிந்த கொரோனா சீனாவை கட்டாயப்படுத்த முடியாது!
கோவிட் வைரஸ் உருவாக்கம் குறித்து அதிக விபரங்கள் கேட்டு சீனாவை கட்டாயப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் தான் கோவிட் வைரஸ் உருவானது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.
சீனாவில் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை. வூஹான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கோவிட் பரவியதாக கருதப்படுகின்றது.
அதே சமயம் கோவிட் வைரஸை சீனா தனது வூஹான் பரிசோதனைக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கிய போது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என ஒரு சாரார் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே கோவிட் வைரஸ் எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சீனாவுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர்.
உணவு சந்தை ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர். இது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் கோவிட் தோற்றம் குறித்த கூடுதல் தரவுகளை வெளியிட சீனாவை கட்டாயப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் கோவிட் வைரஸ் எங்கு தோன்றியது என்பதை அறிந்து கொள்ள தேவையான ஆய்வுகளை உலக சுகாதார அமைப்பு முன்மொழிகிறது என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.