உலக நாடுகள் திணறல் பாதுகாப்பாக இருக்கும் சீனா!
சீனாவில் இதுவரை 80 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் கோவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவி ஆட்டிப் படைத்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வந்த நிலையில், பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தனர். இருப்பினும், வைரஸ் உருமாற்றம் அடைந்து 2வது, 3வது அலைகளாக மீண்டும் பல்வேறு நாடுகளை தாக்கி வருகிறது.
பல நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி கோவிட் பரவலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
உலக நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் சீனா பாதுகாப்பாக உள்ளது. சீனாவில் தற்போதுவரை 91,316 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் வெறும் 16 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் பணிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளன. இதன்படி, 139 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் இதுவரை மொத்தம் 80 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரம் கோவிட் தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது