தடுப்பூசி சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும்!
உத்திரபிரதேச மாநிலம் எடவாடாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருப்பதால் அதனை செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் அதேநேரம், சந்தேகம் காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்கி வருகின்றனர். குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் தடுப்பூசி போடவரும் சுகாதார ஊழியர்களை பார்த்து மக்கள் ஆற்றில் குதித்து தப்பியோடிய சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில் அம்மாநிலத்தின் எடவாடா மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்றனர். அப்போது மது விற்பனை செய்யும் தனியார் ஊழியர்களிடம் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் காட்டினால் மட்டுமே மதுவை வழங்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.