யாழ். குருபீடாதிபதியின் மறைவுக்கு இந்துமத இணைப்பாளர் அனுதாபம்!
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய ஆதீன கர்த்தாவும் சுதுமலை ஸ்ரீ
புவனேஸ்வரி அம்பாள் ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ சம்போ மகேஸ்வர
சிவாச்சாரியாரின் மறைவு அந்தணர் சமுகத்திற்கும் இந்து மக்களுக்கும்
பேரிழப்பாகும்.
யாழில் இயங்கும் இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவராக இருந்து அதனை
சர்வதேச இந்து குருமார் ஒன்றியமாக்கிய பெருமை இவருக்குண்டு.
இதன்பின்னர் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் மூலம் சர்வதேச
இந்துமத குருபீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு இந்து மக்களுக்கு பெரும் பணியாற்றியுள்ளார்.
மேலும் இவர் யாழ். ஆணப்பந்தியில் இயங்கும்
அந்தணர் குருகுல பாடசாலையை; அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும்
தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ மூலம் ஆரம்பித்து வைக்க
பக்கபலமாக இருந்தார். அத்தோடு யாழ். பல்கலைக்கழகத்தின் பேரவை
உறுப்பினராகவும் முன்னர் கடமையாற்றியிருக்கின்றார்.
சமுக உணர்வு கொண்ட இவரின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும்.
சிவாச்சாரியாரின் ஆத்மா சாந்தியடைய அந்தணர் பெருமக்களும்
இந்துமக்களும் ஒருமித்து மனதார இறைவனைப் பிரார்த்திப்போம்.