இலங்கையில் இந்தியாவின் நிலைமை ஏற்படும் அபாயம்!
கொரோனா வைரஸ் பரவவால் இந்தியாவில் ஏற்பட்ட நிலைமை இன்னும் இலங்கையில் ஏற்படவில்லை. எனினும், பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் அத்தியையை நோக்கி நாடு நகர்வதை தடுக்க முடியாமல் போகும் .” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இந்தியாவில் ஏற்பட்டதைபோன்றதொரு நிலைமை இன்னமும் இலங்கையில் ஏற்படவில்லை என்பதை எவ்வித அச்சமும் இன்றி கூறிக்கொள்கின்றேன். இருந்தாலும் நாம் விழிப்பாகவும், அவதானத்துடனும் இருக்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் சுகாதார நடைமுறைகளைமீறி , பொறுப்பற்றவிதத்தில் செயற்பட்டால் இந்தியாவில் ஏற்பட்ட நிலையை நோக்கி நகரவேண்டிய நிலை ஏற்படும்.
வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னர் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நோயாளியொருவருக்கு சிகிச்சைபெறுவதற்கு உள்ள உரிமையை எந்தவொரு அரச வைத்தியசாலையும் நிராகரித்துவிடமுடியாது. எனவே, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளியை வீட்டில் வைத்திருக்காமல், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ” – என்றார்