கொரோனா காலத்தில் செய்யக் கூடியதும், கூடாததும்!
கொரோனா வைரஸ் பரவலால், உடல்நலம் பாதிக்கப்படுபவர்களை விட மனநலம் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.
இந்த வைரஸ் தங்களைத் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் சிலர் இருக்க, இதனால் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதை நினைத்தும், பொருளாதார நிலை குறித்தும் நினைத்து வருத்தப்பட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்தச் சூழ்நிலையில் கொரோனா காலத்தில், உங்கள் உடல் மற்றும் மனநிலையை நல்லபடியாக வைத்துக்கொள்ள நீங்கள் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
முதலில் நாம் செய்யவேண்டிய விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்:
1.கொரோனா வைரஸின் அறிகுறிகள், அது வந்தால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி நம்பகமான வலைப்பக்கங்கள் மற்றும் புத்தகங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இது கொரோனா வைரஸ் பற்றிய ஒரு புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தும்.
2.எத்தகைய சூழலையும் நம்மால் கடந்து வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையையை உங்கள் மனதில் விதையுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றால் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். எதையும் எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையை இது உங்களுக்கு அளிக்கும்.
3.மனதை அலைபாய விடாமல் நல்ல புத்தகங்களைப் படியுங்கள். யடியூப்பில் உங்களுக்கு பிடித்தமான படங்களைப் பாருங்கள். இதனால் உங்கள் மனம் லேசாகும்.
4.சதா வேலை வேலை என்று இருப்பதால் குடும்பத்துடன் இருக்க முடியவில்லையே என்று எத்தனை நாள் ஏங்கி இருப்பீர்கள்? உங்கள் குடும்பத்துடன் இருக்க, இயற்கையாகப் பார்த்து கொடுத்த நேரம் இது என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்துடன் திகட்டத் திகட்ட நேரத்தைச் செலவிடுங்கள்.
5.யோகாசனம், தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள்.
6.சும்மா இருக்கும் நேரத்தில் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தைச் சுத்தம் செய்வது, புத்தகங்களை அலமாறிகளில் அடுக்கி வைப்பது போன்ற ஆக்கபூர்வமான பணிகளைச் செய்யுங்கள்.
- பழைய நண்பர்களை போனில் தொடர்பு கொள்ளுங்கள். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அவர்களுடன் பேசி மகிழுங்கள்.
இதனால் நட்பை புதுப்பிப்பதுடன், உங்களையும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இனி கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்யக்கூடாத விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
- தேவையற்ற, கொரோனா பற்றிய பயமுறுத்தும் செய்திகளைப் பகிரும் சமூக வலைதளப் பக்கங்கள், வாட்ஸ் அப் செய்திகளை தவிருங்கள்.
2.நமக்கு கொரோனா வைரஸ் வந்துவிடுமோ என்ற அச்சத்தைத் தவிருங்கள்.
3.அதேநேரத்தில் நமக்கெல்லாம் கொரோனா வைரஸ் வராது என்று அசட்டையாகவும் இருக்க வேண்டாம். எப்போதும் விழிப்புடன், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.
4.மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளைப் பரப்பாதீர்கள்.
5.தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள். தவிர்க்கமுடியாத விஷயங்களுக்கு மட்டும் வெளியில் செல்லுங்கள்.