கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து உமிழ் நீர்த்துளிகள் 6 அடி தூரம் வரை பரவுமாம்!
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபரிடம் இருந்து ஏரோசால் எனப்படும் நுண்ணிய நீர் துகள்கள், 30 அடி தூரம் வரை காற்றில் கொண்டுச் செல்லப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜயராகவன் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிகுறிகள் முற்றிலும் இல்லாதவர்கள் கூட கொரோனா பரவ காரணமாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருமல் மற்றும் தும்மல் மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரிடமிருந்து உமிழ் நீர்த்துளிகள் சாதாரணமாக 6 அடி தூரத்திற்கு பரவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுண் உமிழ் நீர்த்துகள்கள் 30 அடி தூரம் வரை காற்றில் கொண்டு செல்லப்படுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
காற்று மூலமாக தொற்று ஏற்படுவதை தடுக்க இரட்டை முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.