முன்கூட்டியே சம்பளம் வழங்க நடவடிக்கை!

நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, அரச ஊழியர்களின் இம்மாத சம்பளம் முன்கூட்டியே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரச ஊழியர்களுக்குமான மே மாத சம்பளம், எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகள் அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக, அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பான சுற்றறிக்கையொன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதனை வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக கருத முடியாது என , அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல், 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.

மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரையிலும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *