கொரோனாவால் அடுத்தடுத்து உயிரிழந்த இரட்டையர்கள்!
கொரோனாவால் அடுத்தடுத்து இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இரட்டையர்களின் ஒருவரான ஜோபிரட் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மறைந்ததைப் பற்றி அறியாத இரட்டையர்களில் இன்னொருவரான ரால்பிரட், தன் சகோதரன் எப்படி இருக்கிறான் என்று கேட்டுள்ளார்.
உண்மையைச் சொல்ல முடியாமல் தவித்த தாயிடம் அம்மா, நீங்க பொய் சொல்றீங்க’ என்று கூறி அடுத்தநாளே ரால்பிரட்டும் மரணமடைந்தத சம்பவம் குடும்பத்தினரை உடைத்து நொறுக்கி விட்டது.
இரட்டையர்களான இந்த சகோதரர்கள் சமீபத்தில் ஏப்ரல் 23ம் தேதியன்று தங்கள் 24ம் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
அதன் பிறகு இருவரையும் கொரோனா தாக்கியது. இவர்கள் இருவரும் சில மணி நேர இடைவெளியில் ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்து மரணமடைந்த செய்தி குடும்பத்தினரையும் நண்பர்களையும் கடும் சோகத்திலும் மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
இந்த இரட்டையர்களின் தாய் தந்தை ஆசிரியர்கள் ஆவார்கள். இருவரும் கோவிட்டை அடுத்து ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், இதில் ஜோபிரட் இறந்த செய்தியை மருத்துவமனை குடும்பத்தாரிடம் தெரிவிக்க அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.
அவர்கள் உடைந்து போயினர். அதே மருத்துவமனையில் வேறொரு வார்டில் சிகிச்சையில் இருந்த இரட்டையர்களில் ஒருவரான ரால்பிரட் தன் தாயை அழைத்து சகோதரன் இறந்தது தெரியவில்லை என்பதால் ஜோபிரட் உடல் நிலை எப்படி உள்ளது என்று கேட்டிருக்கிறார்.
ஜோபிரட் இறந்ததை தெரிவித்தால் ஆல்பிரட் அதிர்ச்சியடைந்து விடுவார் என்று தாயார், ஜோபிரட் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உடனே ஆல்பிரட், ‘அம்மா நீங்கள் பொய் சொல்கிறீர்கள்’ என்று கூறியுள்ளார். இவரும் அடுத்த நாளே கோவிட்டிற்கு மரணமடைந்தார்.
இந்தியாவின் கொரோனா மரணங்களில் வெளிவரும் பல சோக, வேதனைக் கதைகளில் இது மிகவும் மனதைப் பாதிக்கக் கூடிய கதையாகும். ஜோபிரட், ஆல்பிரட் இரட்டையர்கள் 3 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள்.
இருவரும் 6 அடி உயரம். இருவரும் சிறுவயது முதலே அனைத்து வேலைகளையும் சேர்ந்தே செய்வார்களாம். இருவரும் பி.டெக் படிப்பை தமிழ்நாட்டின் கோவையில் படித்து முடித்துள்ளனர்.
ஜோபிரட் ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சரில் பணியாற்றி வந்தார், சகோதரன் ஆல்பிரட் ஹுண்டாய் மியுபிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் அயல்நாடு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஜோபிரட் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளைக் கவனிக்க ஆல்பிரட் ஹைதராபாத்திலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் பிறந்தநாளைக் கொண்டாடிய மறுநாள் இருவருக்கும் காய்ச்சல் எடுத்தது. வீட்டிலேயே இருவருக்கும் சிகிச்சை அளித்து பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் அவ்வப்போது ஆக்சிஜன் அளவை பரிசோதித்துள்ளனர்.
ஆனால் இருவரது உடல்நிலையும் மோசமடையவே மே 1ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மே 10ம் தேதி இருவரது டெஸ்ட்டும் கோவிட் நெகெட்டிவ் என்று கூறியதையடுத்து குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் 3 நாட்கள் கழித்து அந்தச் செய்தி இடிபோல் இறங்கியது, ஜோபிரட் இறந்து போன செய்திதான் அது, சகோதரனின் இறப்பை தாங்க மாட்டார் ரால்பிரட் என்பதற்காக அவரிடம் சொல்லாமல் மறைத்துள்ளார் தாயார்.
ஏனெனில் நிச்சயம் ரால்பிரட் தாங்கமாட்டான் என்றார் அந்தத் தாய். இருவரையும் பிரிக்க முடியாது. கடைசியில் மரணத்திலும் பிரியாமல் சென்ற சோகம் அந்த குடும்பத்தையே உடைந்து நொறுங்கச் செய்துள்ளது.