சிகிச்சைக்கு வந்த 80 வீதமான தடிமன் நோயாளர்களுக்கு கொரோனா!


கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் இரு வாரங்களில் எதிர்பார்க்காதளவிற்கு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (14) சிகிச்சைகளுக்காக வருகைத் தந்த தடிமன் நோய் அறிகுறிகள் காணப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட அன்டீஜன் பரிசோதனைகளில், 80 வீதமானோருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷேனால் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
இந்த அபாயகரமான நிலைமையினால், கம்பஹா மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை கட்டமைப்பு பாதிப்புக்களை எதிர்நோக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த அபாயகரமான நிலைமையை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் உடனடியாக வகுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் பாரதூரமான பாதிப்புக்கள் இல்லாத கொவிட் தொற்றாளர்களை, தமது வீடுகளிலேயே வைத்து, சிகிச்சைகளை வழங்கும் நடைமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து நாளாந்தம் தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தற்போது எழுந்துள்ள இந்த அபாயகர நிலைமை குறித்து தாம், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தை தெளிவூட்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி ஆகியோரையும் தெளிவூட்ட எதிர்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷேனால் பெர்ணான்டோ குறிப்பிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *