பிள்ளைகளைப் புரிந்துகொள்ள சரியான தருணம் எது?
கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை.
இந்தச் சூழலைப் பிள்ளைகளைப் புரிந்துகொள்ள கிடைத்த தக்கத் தருணமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் உளவியல் ஆலோசகர் யாழினி. ‘தாய்’ இணைய இதழுக்காக அவருடன் பேசியதிலிருந்து.
குழந்தைகளின் மனநிலை குறித்துச் சொல்லுங்கள்.
சூழலுக்குத் தகுந்தாற்போல் தங்களைத் தகவமைத்ததுக் கொள்ளும் திறன்கொண்டவர்கள் குழந்தைகள். அவர்களைப் புரிந்துகொண்டு சரியானவர்களாக அவர்களை வளர்த்தெடுப்பது அழகான சவால்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலை அவர்களுக்கு புதிது. தேவையற்ற அழுத்தத்திற்கு ஆளாகாமல் பிள்ளைகளைக் கையாள வேண்டியது அவசியம்.
உண்மையில் அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்ள கிடைத்த நல்ல தருணம் இது.
கணவன், மனைவி இருவரும் வேலைக்காக ஓடிக்கொண்டே இருந்த நிலையில், பிள்ளைகளிடம் மனம் விட்டுப்பேச நேரம் கிடைக்கவில்லை. இப்போது அதனைச் சரிசெய்துவிட முடியும்.
வயதுவாரியாக குழந்தைகளின் மனவோட்டம் குறித்தது சொல்ல முடியுமா?
2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்: இவர்களை எப்போதும் கண் பார்வையில் வைத்திருக்க வேண்டும். பொருள்களை ஆராயும் திறனில் இந்தக் குழந்தைகள் அக்கறை காட்டும்.
பெரிய பொம்மைகள், சத்தம் எழுப்பும் பொருள்கள், வண்ணமயமான பெரிய பொருள்கள் உள்ளிட்டவை அவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
எனவே அவர்களிடம் பாதுகாப்பான பொருள்களைக் கொடுத்து விளையாட வைக்கலாம். அதிக நேரம் இந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம்.
2-4வயதுக்கு உட்பட்டவர்கள்: கட்டுமான அறிவு பளிச்சிடும் வயது இது. பில்டிங் ப்ளாக்ஸ கொடுக்கலாம். சின்ன டம்ளர்கள் அல்லது பேப்பர் வைத்து அவர்களாகவே உருவாக்க உதவலாம்.
அதாவது பொருள்களை ஒன்று சேர்த்து உருவாக்குவது இந்த வயதினரின் தனித்தன்மை.
4-7வயதுக்கு உட்பட்டவர்கள்: இவர்களுக்கு இமிடேட் செய்யும் ஆற்றல் இருக்கும். ஆசிரியர் போன்று பேசுவார்கள். பாட்டி போன்று பேசிக் காட்டுவார்கள். அப்படி அவர்களைப் பேசச் சொல்லிக் கேட்கலாம்.
8-10 வயதுக்கு உட்பட்டவர்கள்: விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டும் வயதுடையவர்கள் இவர்கள். வீட்டில் இருந்தபடியே அவர்கள் சொந்தமாகவே விளையாட்டை உருவாக்கும் திறன் உடையவர்கள். எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் சுதந்திரமானவர்களாக இருக்க விரும்புவர். குடும்ப விஷயங்களில் அதாவது சின்னச்சின்ன வேலைகளைச் செய்யச் சொல்லலாம்.
தன்னை நம்பி இந்த வேலையைக் கொடுத்துள்ளார்கள் என்று கவனத்துடன் செய்வார்கள். அந்த வேலையைச் செய்து முடித்தவுடன் அவர்களைப் பாராட்ட வேண்டும்.
இவர்களை மட்டுமல்ல அனைத்து வயது குழந்தைகளையும் பாராட்டுதல் அவசியம். அவர்கள் குறிப்பிட்ட வேலையை எப்படிச் செய்தார்கள் என்று அனுபவங்ளை பொறுமையாகக் கேட்க வேண்டும்.
‘21 நாள்களும் குழந்தைகளும்’ நிறைவாக சொல்ல விரும்புவது?
பிள்ளைகளைப் புரிந்தது கொள்ள கிடைத்த அற்புத தருணம், பெரிய சந்தர்ப்பம். சொன்னால் புரிந்து கொள்வார்கள்.
ஆனால் பக்குவமாகச் சொல்ல வேண்டும். கவனமான அக்கறை அவசியம். அவர்கள் பேசுவதைக் கவனிக்க வேண்டும்.
உறவைப் பலப்படுத்த உற்ற நேரம் இது. எனவே வேலை, விளையாட்டு என்று நேரத்தைப் பிரித்துக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.