ராகுல் காந்திக்கு கொரோனா!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என முக்கிய  தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர்  பக்கத்தில், லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் ஜி, விரைந்து குணமடைய விரும்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு மன்மோகன் சிங்கின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் நாட்டுக்கு தேவை என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.ராகுல் காந்தி இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *