உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தீவிரவாதம் அல்ல அரசியல் நோக்கமே!

“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு மத தீவிரவாதம் காரணமல்ல. மத தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முற்பட்ட சிலரது செயலே இது” என பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்காக பொரளை மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு நேற்று (18) மலரஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“அன்று  எமது சகோதரர்களை தாக்கியவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர். அந்த மத அடிப்படைவாதிகளை தமது கை பொம்மைகளாக பயன்படுத்தி, தமது அரசியல் அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ள முன்னின்றவர்களே அதனைச் செய்தனர்.  தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சில குழுவினர் முன்னெடுத்த முயற்சியின் பிரதிபலனாகவே அதனை நாம் பார்க்கின்றோம்.  மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ மற்றொருவரை துன்புறுத்துவதற்காக பயன்படுத்த வேண்டாம் என நாட்டிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை முன்வைக்கின்றோம்.  அத்துடன் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஏனையவர்களை கொலை செய்யும் சிந்தனையிலிருந்து விடுபடுங்கள்.” என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் இதன்போது குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மத தீவிரவாதமே காரணம் எனக் குறிப்பிட்டு அரசாங்கம் 11 அமைப்புகளை தடை செய்து, பலரை கைது செய்துள்ள நிலையிலேயே கர்தினாலின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *