சென்னையில் அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை குறைந்ததாக இல்லை. மேலும் தினசரி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிதாக இன்று மட்டும் 7,819 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில், இன்று மட்டும் 2,564 பேர் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கையானது 20,144 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 772 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்குச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,089 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோவையில் இன்று 540 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று 3 பேர் தொற்றால் இறந்துள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,544ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் பகுதிகளாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலிருப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது போன்ற தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்களின் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *