அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்களில் நல்ல காரியங்கள் தொடங்கக்கூடாதது ஏன்?

பொதுவாக அஷ்டமி, நவமி திதிகள் மற்றும் கரி நாட்களில் தொட்டது துலங்காது என்பர். மேலும் இந்நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே போகும் என்பர். அதன் காரணங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

அஷ்டமி :

கோகுல அஷ்டமி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். அவர் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தார். ஸ்ரீ கிருஷ்ணன் அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார். இறுதியில் வெற்றி பெற்றார். எனவேதான் அஷ்டமி திதிகளில் சுப காரியங்களான திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்நாள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உகந்த நாளாகும். குறிப்பாக செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவையாகும்.

நவமி:

அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். நவமி திதியில் தான் ஸ்ரீ ராமர் அவதரித்தார். அவர் அரியணை ஏற்கும் நேரத்தில் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்தது தான் காரணம். எனவே நவமி திதியில் நல்ல காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. ஆனால் தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.

பொதுவாக, அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். உதாரணமாக தாக்குதல், பதிலடி தருதல், வீழ்த்துதல், பழி வாங்குதல் போன்ற எண்ணங்கள் அந்த திதிகளில் அதிகரிக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். மேலும், தெய்வங்களுக்கு உயிர் பலிக்கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றிற்கும் இந்நாள் ஏற்புடையதாகும்.

கரி நாள் :

கரி நாளைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் திதி, நட்சத்திரக் கணக்கு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை திதி என்றும், அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திரக் கணக்கு என்றும் கூறுவர். குறிப்பிட்ட திதி, நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அது கரி நாளாக கருதப்படுகிறது. பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் துவக்கினால் அது விருத்திக்கு வராது என்று கூறுவர். எனவே, விருத்திக்கு வரக் கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம். உதாரணமாக கடனை திருப்பி செலுத்துதல் போன்று. ஏனென்றால், அன்றைக்கு கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது என்பது நம்பிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *