எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மஹிந்த பங்காளிக்கட்சிகளுடன் அவசர சந்திப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பின்போது எட்டப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கூட்டணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து மே தின நிகழ்வை தனியாகவும், ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனிமாகவும் மேதின நிகழ்வுகளை நடத்துவதற்கு தயாராகிவருகின்றமை ஆளுந்தரப்புக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் ஆளுந்தரப்பால் முன்வைக்கப்பட்ட புதிய யோசனைக்கு 11 பங்காளிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சி பங்காளிகளை பிரதமர் சந்திக்கின்றார்.
கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இதன்போது முடிவு கட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது