73 வயது மூதாட்டிக்கு மணமகன் தேவை ருசிகர விளம்பரம்!

கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார்-உறவினர்கள் போன்ற சொந்தங்கள் மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் என்று கூறலாம். இதில் ஒருவர் இறந்தாலும், மீதமுள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொள்வது வழக்கம். ஆனால், வயதான பின் தாய், தந்தை ஆகியோரை இழந்து வேறு சொந்தம் இல்லாமல், தவிக்கும் சிலர் எப்படி பரிதவிக்கிறார்கள் என்பதற்கு மைசூருவில், நடந்த ஒரு சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.

அதாவது மைசூருவை சேர்ந்தவர் 73 வயது மூதாட்டி. அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது பெற்றோரை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்ய முன்வந்துள்ளார். இதற்காக ஆரோக்கியமான, திடகாத்திரமான 73 வயதுக்கு மேற்பட்ட ஆண்மகன் தன்னை அணுகலாம் என்று விளம்பரம் செய்துள்ளார். தான் தனிமையில் இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதனால் தான் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், 73 வயதான பிராமண வகுப்பை சேர்ந்த தனக்கு அதே வகுப்பை சேர்ந்தவர் மணமகனாக வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களிட கூறியதாவது:-

எனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். பின் என்னுடைய பெற்றோருடனேயே வசித்து வந்தேன். நன்றாக படித்தேன். அரசு வேலை கிடைத்தது.

என் பெற்றோரை நன்றாக கவனித்து கொண்டேன். சொந்த வீடு வாங்கினேன். வயதான எனது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. அதனால் நான் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடைய பெரிய வீட்டில் நான் ஒருவள் தனியாக இருப்பது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது.

இதனால்தான் நான் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். எனக்கு பிள்ளைகள் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக இருக்கும் 73 வயதுக்கு மேற்பட்டவர் மணமகனாக கிடைத்தால்தான் அது எனக்கு பொருத்தமாக இருக்கும். அவர் என் மனதை புரிந்து கொண்டு எனக்கு ஆறுதலாக இருப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

73 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு ஆரோக்கியமான, திடகாத்திரமான மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த சம்பவம் மைசூருவில் ருசிகரமாக பேசப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *