4 தசாப்தங்களிலும் சிறப்பாக விளையாடி சாதனைப் படைத்த சச்சின்!
சச்சின் டெண்டுல்கர் 4 தசாப்தங்களிலும் சிறப்பாக விளையாடி வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஓய்வுபெற்ற மூத்த வீரர்களை உள்ளடக்கிய இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் இந்திய அணி கோப்பை வென்று அசத்தியது.
இந்திய லெஜண்ட்ஸ் அணி கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டார். இதில் சச்சின் டெண்டுல்கர் 7 இன்னிங்ஸ் ஆடி 233 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் திலகரத்னே தில்சன் (271), தரங்கா (237 ஆகியோர் உள்ளனர். சச்சின் இத்தொடரில் இந்திய லெஜண்ட்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி அதிக ரன்கள் குவித்ததன் மூலம், 4 தசாப்தங்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய வீரராக திகழ்கிறார்.
ஒரு தசாப்தம் என்பது 10 ஆண்டுகளைக் குறிக்கும். 1990களில் நடந்த உலகக் கோப்பை முதல் தற்போது நடந்து முடிந்துள்ள லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் என அனைத்திலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக உள்ளார்.
* 1996ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர். (வயது23)
* 2003ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர். (வயது30)
* 2011ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர். (வயது38)
* 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர். (வயது 47)
இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.