அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பஷில் ராஜபக்ச?
2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போட்டியிடமாட்டார் எனவும், பஸில் ராஜபக்சவே களமிறங்கக்கூடும் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பஸில் ராஜபக்சவையும்,பிபி ஜயசுந்தரவையும் வெளியேற்ற வேண்டும் என ஆளுங்கட்சியிலுள்ள குழுவொன்று போராடுகின்றது. மறுபுறத்தில் தான் ‘பாஸ்’ என சான்றிதழ் வழங்கிவருகின்றார்.பொருளாதார நெருக்கடி காரணமாகவே இவ்வாறெல்லாம் நடக்கின்றது.
விமல் வீரவன்ஸ உள்ளிட்ட குழுவினர் அண்மையில் ஜனாதிபதியை சந்திக்கச்சென்றுள்ளனர்.மொட்டு கட்சியின் தலைவராக மஹிந்த இருக்கட்டும், அக்கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில் தலைமைப்பதவியை நீங்கள் பொறுப்பெடுங்கள் என இதன்போது கோரிக்கை முன்வைத்துள்ளனர்.இந்த மாற்றம் நடந்தால் நாட்டில் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா, இல்லை. மாறாக விமல் தரப்பின் பிரச்சினைதான் தீரும்.
கோட்டாபய ராஜபக்சவிடம் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட பின்னர், தன்னால் அரசியல் செய்ய முடியாது எனவும், அடுத்த தேர்தலில் தான் போட்டியிடமாட்டார் எனவும் கோட்டா பதிலளித்துள்ளளார்.
தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெறக்கூடிய வேட்பாளரையே தயார் செய்ய வேண்டும் எனவும் சந்திப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த வேட்பாளர் யார்? பஸில் என்பவரே அவர்.” – என்றார் அநுர குமார திஸாநாயக்க