முதல் முறையாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடக்கம்!

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம்செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம், கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்த இருவரது சடலங்கள் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசம் ஒன்றில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை மட்டக்களப்பின் ஓட்டமாவடி, அம்பாறையின் இறக்காமம் ஆகிய இடங்களில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைப் புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், சுகாதார வழிகாட்டல்களும் வெளியாகியிருந்தது.

இதன்படி, மட்டக்களப்பின் ஓட்டமாவடி காகிதம நகர், மஜ்மா நகர் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட காணியில் கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் ஓட்டமாவடி – மஜ்மா நகரிலுள்ள காணியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சட்டவைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் வெலிகந்த ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து கொடீரானாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றது.

மேலும், கொவிட் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யும் நடவடிக்கை கடுமையான சுகாதார பாதுகாப்பு முறைமையின் கீழ், பிரதேசத்தின் சுகாதார அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழே இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *