கொலையாளி கடைசியாக குடும்பத்திற்கு எழுதிய கடிதம் சிக்கியது!

தற்சமயம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
கொழும்பு-டேம் வீதியில் கடந்த திங்கட்கிழமை பயணப்பொதியில் சுற்றிவைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

காவல்துறையினர் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்தனர்.

இதற்கமைய சடலமாக மீட்கப்பட்ட பெண் குருவிட்ட பகுதியை சேர்ந்த 30 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த பெண்ணின் சடலத்தை பயணப்பொதியில் கொண்டு வந்த நபரை சீ.சீ.டீ.வி மூலம் அடையாளம் கண்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் புத்தல காவல்துறை பிரிவில் காவல்துறை பரிசோதகராக சேவையாற்றி வரும் நபர் என்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து இவரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் சந்தேக நபர் இன்று காலை தனது வீட்டுக்கருகில் உள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது இவர் துக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என கண்டறியப்பட்டது.

இவரது சடலத்துக்கருகில் தனது மனைவிக்காக எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த கடிதத்தில் தனக்கு திருமணத்திற்கு அப்பால் ஒரு உறவு காணப்பட்டதாகவும் அந்த உறவு காரணமாக பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் காவல்துறை பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மனைவிக்கு தெரியாமல் தான் இழைத்த தவறுகளுக்காக மன்னிப்புக்கோருவதாகவும் அந்த கடிதத்தில் காவல்துறை பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் தனது தாயின் உத்தரகிரியைகளுக்காக வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் காவல்துறை பரிசோதகராக சேவையாற்றுவதற்கு முன்னர் இரத்தினபுரி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவின் பாதுகாப்பு பிரிவில் தொழில் புரிந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அதேபோல் சம்பவத்தில் உயிரிழந்த 30 வயதான பெண்ணின் சகோதரனும் ஐக்கிய தேசிய கட்சியை பிரநிதித்துவப்படுத்தும் குருவிட்ட பிரதேச சபை உறுப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன்,இந்த பெண் கொலை செய்யப்பட்டதுடன் சடலத்தை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சடலத்தின் பிரேத பரிசோதனையை இன்று -03- நடத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும்,சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை இன்னமும் கண்டறியப்படவில்லை என்றும் அதனை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

2

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான தற்கொலை உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவர் இறுதியாக வீட்டிற்கு வந்த சந்தர்ப்பத்தில் குறித்த கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடிதத்தில் அவர், எனது மூன்று பிள்ளைகளுடனும் சந்தோஷமாக இருங்க. காலம் கடந்து செல்லும் போது சோகம் மறந்து போகும். உலகம் உருவாகும், நிலைத்து நிற்கும், காணாமல்போய் விடும் இதுவே உலக நியதி… என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து விஷ போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

52 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *