இளம்பெண்களைப் பாதிக்கும் பிரச்சனை!
கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையங்கள் இன்றைய இளம் பெண்களை பெரிதும் பாதிக்கின்றன. அதற்கான காரணங்களும், அதைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
“உலகளவில் 21 சதவிகிதம் பேர் கருவளையம் பாதிப்பால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அதிலும், குறிப்பாக 10 முதல் 22 வயது பெண்களிடம் இப்பிரச்சனை அதிகமிருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கான காரணங்களை அகம், புறம் என இரண்டாகப் பிரித்து, அதற்கேற்ப சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. கண்களைச் சுற்றியுள்ள சருமம் மெலிதாக இருக்கும்போது, ரத்த நாளங்கள் வெளியே பளிச்சென்று தெரிந்து கருவளயைம் போன்றே காட்சியளிக்கும்.
கண் அழுத்தப் பிரச்சனைக்குப் பயன்படுத்தும் மருந்துகளும், கண்களைச் சுற்றி கருமையை ஏற்படுத்தலாம். உடலால் உபயோகப்படுத்தப்படாத உபரி இன்சுலின், சருமத்தைத் தூண்டி அதன் அடர்த்தியை அதிகரிக்கும். அதனாலும் கருவளைங்கள் தோன்றலாம். நீரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சகஜம்.
அதிக நேரம் டி.வி. பார்ப்பது, கம்யூட்டர் முன் உட்கார்ந்திருப்பது, எளிதில் அலர்ஜி தொற்று உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் தொடர்ச்சியாக தும்மல் போடுகிறவர், தூது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கருவளையங்கள் வரும்.
தூக்கமின்மை, ரத்த ஓட்டத்தை சிதைக்கும் மன அழுத்தம், மது மற்றும் புகைப்பழக்கம், கண்களுக்கடியில் உள்ள தசைகள் தடிப்பது, முக அமைப்பே மெலிந்து காணப்படுவது, அதன் தொடாச்சியாக முகத் தசைகளில் கொழுப்பு குறைவது,
கண்களைச் சுற்றி, ஹீமோகுளோபின் சேர்வது, கல்லீரல், இதயம், தைராய்டு, சிறுநீரகங்கள், பரம்பரையாகப் பாதிக்கும் ரத்த நோய்கள், வைட்டமின்-கே பற்றாக்குறை போன்றவையும் கருவளையங்களை ஏற்படுத்தக் கூடும்.
கருவளையத்தின் தன்மை மேலோட்டமானதா என பார்த்த பிறகே, சரும மருத்துவர்கள் சிகிச்சையை முடிவு செய்வார்கள்.
கருமையைப் போக்கும் வெளிப்புற பூச்சுகளைப் பயன்படுத்தி ஓரளவுக்கு சரி செய்யலாம். லேசர் சிகிச்சையும் பலனளிக்கும். இது தவிர, இந்தப் பிரச்சனைக்கான சமீத்திய சிகிச்சை முறைகளும் உள்ளன.
தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையைப் பார்க்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வது போன்றவை அடிப்படை அவசியமான அறிவுரைகள். இதைப் பின்பற்றினாலே கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைப் போக்கலாம்” என்கிறார் டாக்டர் செல்வி ராஜேந்திரன்.