தமிழ் மக்களின் உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்!
தமிழ் மக்களின் உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும் என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான இந்திரா மனி பாண்டே உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்,
அத்துடன், இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள் மற்றும் அறிக்கை குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீதான தீர்மானங்கள் தொடர்பில் இந்தியா அதன் நெருங்கிய நட்பு நாடாகவும் நெருங்கிய அயலவராகவும் எப்போது பங்கேற்று வருவதாகவும் இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கூறியுள்ளார்,
அத்துடன் தமிழர்களின் சமத்துவம் நீதி மற்றும் தனித்துவத்திற்காவும் இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,.
தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பதுடன் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை முன்னெடுப்பது இலங்கையின் அர்த்தமுள்ள ஒருமைப்பாட்டிற்கு நேரடியாக பங்களிப்பு செய்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்,.
ஆகவே தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்ற இந்தியா எப்போதும் முன்னிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது