இலங்கையர்கள் கொரோனா பயங்கரத்தை இன்னும் கண்டதில்லை!
உயர் நிலை சுகாதார அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தனியார் துறைச்சார்ந்த வைத்தியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசியை வழங்க உத்தேசித்துள்ளளதாக முதல்நிலை சுகாதார சேவை, தோற்று நோய் மற்றும் கொவிட் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
´தனியார் துறையினருக்கு கொவிட் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வழங்க எதிர்பார்க்கின்றோம். அதேபோல் வைத்திய மற்றும் தாதி மாணவர்களினதும் விண்ணப்பம் கிடைத்துள்ளது. விமான நிலைய ஊழியர்களும் தடுப்பூசியை வழங்குமாறு கேட்டுள்ளனர். தற்போது 180 மில்லியன் தடுப்பு மருந்தை கேட்டுள்ளோம். அதற்கமைய அடுத்த மாதமளவில் 30 இலட்சம் மருந்துகள் கிடைக்கும். கொவிட் தொற்று அதிக வீரியமானது. அதன் பயங்கரத்தை இலங்கையர்கள் இன்னும் கண்டதில்லை´ என்றார்.
எனவே, பி.சி.ஆர் பரிசோதனைக்கு பயமில்லாமல் முகம் கொடுக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாகவும் டொக்டர் அமல் ஹர்ச டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.