சிறு பிள்ளைகளுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை இல்லை!
சிறு பிள்ளைகளுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை இல்லை. அத்துடன், கட்சிகளை விமர்சிக்கும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது.” – என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்று விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.அவரின் இக்கருத்தை கண்டிக்கின்றோம்.
எமது கட்சி தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு விமல்வீரவன்சவுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. எனவே, கட்சி தலைமைத்துவம் குறித்து அவர் வெளியிட்ட கருத்தை மீளப்பெற வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
அத்துடன், விமல்வீரவன்ஸ அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லாச்னாவும் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட விமல்வீரவன்ச கூறியதாவது,
” நாட்டுக்காகவும், மக்களை முன்னிலைப்படுத்தியுமே நான் அரசியல் நடத்துகின்றேன். தீர்க்கமான கட்டங்களில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். இது நாட்டு மக்களுக்கு தெரியும்.
அதேபோல ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளை விமர்ச்சிக்கின்றோம். அவ்வாறு கட்சிகளை விமர்சிக்கும் சுதந்திரம் இருக்கின்றது. அதனை எவரும் தடுக்கமுடியாது. போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மஹிந்தவுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பாடுபட்டமை ஆகியன தவறென்றால் நான் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.
அத்துடன், சிறுபிள்ளைகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. அது பற்றி அலட்டிக்கொள்ளவும் தேவையில்லை. எமது கட்சியில் உளவாளிகள் இல்லை. அவ்வாறு இருந்தால் அது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தட்டும்.” – என்றார் விமல்.