உலகில் ஒவ்வொரு 7.7 விநாடிகளில் ஒருவருக்கு கொரோனா!

உலகளாவிய கொரோனா தொற்று சம்பவங்கள் நேற்று புதன்கிழமை 100 மில்லியனை கடந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரம் காட்டுகிறது. புதிய கொரோனா திரிபுகளால் உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதோடு தடுப்பு மருந்து விநியோகத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 1.3 வீதத்தினர் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதோடு இந்தப் பெருந்தொற்றினால் 2.1 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓர் ஆண்டுக்கு முன்னர் இந்த நோய்த் தொற்று ஆரம்பித்தது தொடக்கம், சராசரியாக ஒவ்வொரு 7.7 விநாடிகளுக்கு ஒருவர் இந்த வைரஸுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு தினத்திலும் சராசரியாக 668,250 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதேபோன்று இதன் உயிரிழப்பு வீதம் 2.15 ஆக உள்ளது.
இந்த நோய்த் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டன் காணப்படுகின்றன. இந்த நாடுகளில் மொத்த கொரோனா சம்பவங்களில் பாதி அளவை கொண்டுள்ளன. ஆனால இந்த நாடுகளின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 28 வீதமாக இருப்பதாக ரோய்ட்டர்ஸ் புள்ளிவிபரம் கூறுகிறது.

கொரோனா தொற்றின் முதல் 50 மில்லியன் சம்பவங்கள் பதிவாவதற்கு 11 மாதங்கள் எடுத்துக்கொண்டபோதும் அது 100 மில்லியனாக இரட்டிப்பாவதற்கு வெறும் மூன்று மாதங்களே எடுத்துக்கொண்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கு எதிராக சுமார் 56 நாடுகள் தடுப்பு மருந்துகள் வழங்க ஆரம்பித்துள்ளன. இதில் 64 மில்லியன் டோஸ் மருந்துகள் போடப்பட்டுள்ளன. இதில் இஸ்ரேல் முதன்மை வகிப்பதோடு அங்கு மொத்த மக்கள் தொகையில் 29 வீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *