அமெரிக்க பாராளுமன்றத்தில் பதற்றம் ஊரடங்கு உத்தரவு!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று மாலை ஆறு மணி (உள்ளூர் நேரம்) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் திடீரென பாராளுமன்றத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றிருந்த நிலையில், அவர் எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்காவின் 46வது ஜனாதபதியாக பதவியேற்கவுள்ளார்.
எனினும், ஜோ பைடனின் வெற்றியை ஏற்காத ட்ரம்ப் தேர்தலில் முறைக்கேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் ஆதரவாளர்கள் திடீரென பாராளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது.

எனினும், பாதுகாப்பு படையினரை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய ஆயிரக்கணக்கானோர் முயற்சித்தனர்.
இதனால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே தலைநகர் வாஷிங்டனில் இன்று மாலை ஆறு மணி (உள்ளூர் நேரம்) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *