மைத்திரியின் பேச்சால் கடுப்பில் மொட்டு கட்சி!
உள்ளக அரசியல் முரண்பாடுகள் தொடர்பான தகவல்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியாட்டு ஊடகங்களிடம் வெளியிட்டமை தவறாகும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணியாக முன்னோக்கி பயணிப்பதே எமது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தனித்துவத்தை நாம் மதிப்பதுடன், அவற்றுக்கு உரிய இடம் வழங்கும் வகையிலேயே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கூட்டணி என்றால் முரண்பாடுகள் ஏற்படக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உள்ளக பேச்சுகளில் ஈடுபட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும்.
2010 -2015 மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் நான் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டேன். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கியும் உள்ளோம். ஊடகவியலாளர்கள் எவ்வாறுதான் கேள்விகள் தொடுத்தாலும், எமது நாட்டு உள்ளக அரசியல் தொடர்பில் கருத்துகளை வெளியிடவில்லை. எதிரணிகளை தாகிபேசக்கூடிய வாய்ப்பிருந்தும் அதனை செய்யவில்லை.
எமது நாட்டுக்குள் கட்சி அரசியலை நடத்தினாலும், நாட்டுக்கு வெளியில் ஒரு தேசமாகவே கொள்கைகளை முன்னெடுத்தோம்.
இந்நிலையில் மேற்படி சம்பிரதாயத்தை மீறும் வகையில் எமது கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர் (முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ) வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக கருத்துகளை முன்வைத்துள்ளார்.
உட்கட்சி பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டு ஊடகங்களில்கூட கருத்து வெளியிடுவது ஏற்படைய விடயமல்ல. அந்தவகையில் அவரின் நேர்காணல் குறித்து கவலையடைகின்றோம். அவ்வாறான செயலை கண்டிகின்றோம்.” – என்றார்.