ஒரே நேரத்தில் இரண்டு முறை கர்ப்பம் மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் அதிசயப் பெண்!
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்திருக்கும் நிலையில், 10 நாட்கள் இடைவெளியில், அவர் மீண்டும் கர்ப்பிணியாகி உள்ளது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் பிளோண்டி பன்னி. தான் கர்ப்பமானது தெரிந்து டாக்டர்களிடம் சென்று உறுதிப்படுத்தி பரிசோதனை செய்திருக்கிறார். அதில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பார்கள் என தெரியவந்ததால், மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்.
இந்நிலையில் 10 நாட்கள் இடைவெளியில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் மீண்டும் கர்ப்பமாகி உள்ளதாக டாக்டர்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். அதாவது 10 நாட்கள் இடைவெளியில், அவர் மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இதனால், பிளோண்டி பன்னி 3 குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் தாயாக உள்ளார்.
இத்தகவலை டிக்டாக்கில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை அவர் வெளிக்காட்டி உள்ளார். அதில், கர்ப்பமானதும் உடம்பில் நிகழும் மாறுதல்கள் எதுவும் என நிகழவில்லை என தெரிவித்துள்ளார்.
மருத்துவ உலகில் இது ‘‘சூப்பர் பெடேஷன்’’ என அழைக்கப்படுகிறது. உலகில் குறைவான பெண்களுக்கு மாதம் இருமுறை கருமுட்டை வெளியாகும். அதில், 3 சதவீத பெண்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில், இரண்டு முறை, கர்ப்பமாகும் நிலை ஏற்படும். இத்தகவலை டாக்டர்கள் தெரிவித்துள்ளதாகவும், வெவ்வேறு நாளில் கருவுற்றிருந்தாலும், இக்குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கும் எனவும் பிளோண்டி பன்னி டிக்டாக் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளாகவே கருதப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவ உலகில் விந்தையாக பார்க்கப்படும் இதனை, சமூகவலைதளவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்