இறைச்சி உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம்!
இறைச்சிகளை அதிகம் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் என அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் உணவுப்பழக்கவழக்கங்கள் பெரிதும் மாறிவிட்டன. பலரும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளுக்கும், சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளுக்கும் அடிமையாகிவிட்டனர். பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே இவற்றைக் கொடுத்து பழக்குகின்றனர்.
இதில் குழந்தைகளுக்கு இறைச்சி அதிகம் கொடுக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. இறைச்சி அதிகம் உண்பது குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தசாப்தங்களாக அமெரிக்காவில் குழந்தைகளிடையே ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என்றும் அறியப்பட்டுள்ளது. 2003-2006 தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனைக் கணக்கெடுப்பில் (NHANES), 2 முதல் 17 வயதுக்குட்பட்ட 4,388 குழந்தைகள் ஆய்வில் பங்கேற்றனர். இறைச்சியை அதிகம் உண்ணும் குழந்தைகளுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தோராக்ஸ் என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.