இங்கிலாந்து கொரோனா இந்தியாவில் நுழைந்தது!
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்து வருகின்றது. இதனால், மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து வந்த 6 பயணிகளுக்கு புதிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா வைரஸ் பரவி வருகின்றது.
இது வீரியத்துடன் இருப்பதாகவும் 70 சதவீதம் வரை மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இதன் காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையேயான விமான சேவையானது 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் இருந்து சமீப நாட்களில் இந்தியாவிற்கு வந்த பயணிகள் கண்டறியப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரசின் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதை மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நவம்பர் 25 முதல் கடந்த 23ம் தேதி இரவு வரை மொத்தம் 33 ஆயிரம் பயணிகள் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ளனர். இதில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களின் ரத்த மாதிரிகள் 10 ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. இதில், 6 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவை சேர்ந்த 3 பேர், ஐதராபாத்தை சேர்ந்த 2 பேர், புனேவை சேர்ந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தனியறைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
- தீவிரமாக கண்காணிக்க மாநிலங்களுக்கு உத்தரவு
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியா திரும்பிய எல்லா பயணிகளுக்கும் மரபணு வரிசை முறை பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையை நடத்துவதற்காக நாடு முழுவதும் 10 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். வெளிநாடுகளில் இருந்த வந்த பயணிகளை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து, பரிசோதனைகள் நடத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது….