இலங்கையில் கொரோனா தொற்று முழுமையான விபரம்!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பனாகொடை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 8 பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவரும், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு 2 பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவரும், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 592 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 554 பேர் மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 38 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 590 ஆக காணப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 715 பேர் நேற்று குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 818 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 438 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 2 ஆயிரத்து 665 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது