இங்கிலாந்தில் பரவி வரும் புது வகை கொரோனாவால் ஒரே நாளில் 36 ஆயிரம் பேர் பாதிப்பு!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு இது பாதியாக இருந்தது. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது குறித்து எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில் தீவிர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
புதிய நோய்ப் பரவல் உருவாகியுள்ளதை தொடர்ந்து, பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகளோடு தாங்கள் தொடர்பில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
கொரோனா வைரஸின் ஆரம்ப வடிவத்தை விடவும் இந்த புதிய வடிவம் அதி வேகமாகப் பரவுகிறது என்றும் ஆனால், பழைய வடிவத்தைவிட இது அதிக மரணத்தை விளைவிப்பதாக இல்லை என்றும் இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.