முஸ்லிம் மக்களை பழிவாங்கவே ஜனாஸாக்கள் எரிக்கப்படுகிறது!
கொவிட் தொற்றால் உயிரிழக்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை பலவந்தமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடானது , அடிப்படைவாத குழுக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் மக்களை பழிவாங்கும் வகையிலேயே அமைந்துள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை புதைக்க முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனமே ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் மாத்திரமே அதற்கு தடை விதித்திருக்கிறது. தனி பௌத்த சிங்கள அரசாங்கத்தை அமைத்துள்ளோம் என்று சில அடிப்படைவாதிகளுக்கு காண்பிப்பதற்காகவே இவ்வாறு முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுகின்றன.
பொலித்தீன் பைகளில் இட்டு ஜனாசாக்களை புதைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மருத்துவத்துறையினர் கூட தெரிவித்துள்ளனர். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் ஏதேனுமொரு அடிப்படைவாத குழுவின் தேவைக்காக முஸ்லிம் மக்களை பழிவாங்குவதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
சிங்கப்பூர் , இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பூசியை இம்மாத இறுதியில் அல்லது ஜனவரியில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அரசாங்கம் பானங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் உண்மையில் கொரோனாவிற்கான மருந்து காணப்பட்டால் அதனை தொற்றாளர்களுக்கு கொடுத்து அவர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.