தாய் மற்றும் மகளுக்கு ஒரே மேடையில் திருமணம்!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் 53 வயது பெண் மற்றும் அவரின் 27 வயது மகள் ஆகியோருக்கு ஒரே மண்டபத்தில் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோரக்பூரில் உள்ள பிப்ராலி தொகுதியில் கடந்த வியாழக்கிழமை ‘முக்யமந்திரி சாமுஹிக் விவாக யோஜனா’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற திருமண விழாவில், பெண் மற்றும் அவரது மகள் இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 63 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

25 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த பெலி தேவி என்பவர் தனது கணவரின் தம்பி ஜெகதீஷை கடந்த வியாழக்கிழமை மணந்துகொண்டார். பெலி தேவிக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
இளைய மகள் இந்துவைத் தவிர அனைத்து குழந்தைகளுக்கும் திருமணமாகி தங்கள் சொந்த குடும்பங்களுடன் வாழ்வதால், பெலி தேவி தனது எஞ்சிய வாழ்நாளை தனது மைத்துனருடன் வாழ்ந்து கழிக்க முடிவு செய்து திருமணம் செய்து கொண்டார்.
இவரது இளைய மகள் இந்துவும், இதே வெகுஜன திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டார்.

“55 வயதான ஜெகதீஷ் இன்னும் திருமணமாகாதவர். எனது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்துடன் வாழ்வதால் எனது கணவரின் தம்பியை திருமணம் செய்ய முடிவு செய்தேன். என் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,” என்று பெலி தேவி கூறினார்.

அவரது இளைய மகள் இந்து, 29 வயதான ராகுலை மணந்தார்.

“எங்கள் தாயின் திருமணத்தில் எனது உடன்பிறப்புகள் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. என் அம்மாவும் சித்தப்பாவும் எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வதில் நாங்கள் இப்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று இந்து கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *