IPL இறுதிப் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது!

ஐபிஎல் போட்டித்தொடரின் பிளே ஆப் சுற்றின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடரின் இறுதிப் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டீ கொக் 40 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 55 ஓட்டங்களையும் மற்றும் ஹர்திக் பாண்டியா 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் முதல் 3 விக்கெட்டுகளும் எவ்வித ஓட்டங்களும் பெறாத நிலையில் வீழ்த்தப்பட்டது. அவ்வணி சார்பாக ஸ்டோனிஸ் 65 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *