நாட்டை முழுமையாக முடக்காவிட்டால் கட்டுப்படுத்த முடியாது!
இலங்கையை குறைந்தது ஒரு வாரத்திற்கேனும் முழுமையாக முடக்காவிட்டால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையகத்திற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பிற்கு திரும்பிய நிலையில் நேற்று (29) கட்சி உறுப்பினர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தார். இதன் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
“குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்காது. கொரோனா வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் அரசாங்கம் இதைவிட அவதானமாக இருந்திருக்க வேண்டும்.
பி.சி.ஆர் பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தினோம். ஆனால் நோயாளிகள் இல்லை என முழு அளவில் பரிசோதனைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.
மேலும், குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மாத்திரம் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை பாரியளவில் மோசமடைந்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இதனை விட அவதானமாக இருந்திருக்க வேண்டும்.
இனி நாட்டை முழு அளவில் முடக்காது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இயலாது. இதனால் தான் குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.