அர்மீனியா – அஜர்பைஜான்: மீண்டும் தொடங்கிய தாக்குதல், பரஸ்பர குற்றச்சாட்டுகள் – தற்போதைய நிலை என்ன?
மனிதநேய அடிப்படையில் மோதலை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்ட நான்கு நிமிடங்களில் அஜர்பைஜான் அதனை மீறியதாக அர்மீனியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து அஜர்பைஜான் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இருநாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் கடந்த மாதம் தொடங்கியது.
சர்ச்சைக்குரிய பகுதியில் 1994ஆம் ஆண்டு போர் நிறுத்தம் நடைபெற்ற பிறகு நடைபெறும் மிகப்பெரிய வன்முறை இதுவாகும்.
இதற்கு முன்னதாக கடந்த வார இறுதியில் ரஷ்ய தலையீட்டால் கையெழுத்தான போர் ஒப்பந்தத்தை மீறுவதாக இருநாடுகளும் ஒன்றன் மீது ஒன்று குற்றம் சுமத்தியது.
இருப்பினும் இருநாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருந்தன.
சர்ச்சைக்குரிய நாகோர்னோ பிரச்சனையை கண்காணித்து அமைதியை நிலைநாட்ட1992ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிபர்களின் கூற்றுப்படி இந்த முடிவு ஏற்பட்டதாக அஜர்பைஜானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அர்மீனியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும் இவரின் இந்த கூற்றை வழிமொழிந்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருருந்தார். அதில் பதற்றத்துக்குரிய பகுதியில் சண்டையை நிறுத்தும் முயற்சியை வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் அஜர்பைஜான், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அர்மீனியா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக அர்மீனியா ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடத்தியதாக அஜர்பைஜான் குற்றம் சுமத்தியிருந்தது இந்த தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.