இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா!

இலங்கையில் இதுவரை 4252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 729 பேருக்கு நேற்றைய தினம் (06) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 729 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக 832 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இன்றைய தினம் 07 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 3266 ஆக அதிகரித்துள்ளது.

973 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *