மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றன.

இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நோபல் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் ஸ்டாக்ஹோமில் அறிவித்தார்.
இந்தாண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஹெபடைடிஸ் சி’ வைரசை அடையாளம் காண இவர்களின் ஆய்வு வழி வகுத்துள்ளது. ‘ஹெபடைடிஸ் சி’ வைரஸ் மட்டுமே ஹெபடைடிசை ஏற்படுத்தும் என்ற ஆய்வுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. 7-ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது.

அதன் பின்னர் 12-ம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ‘ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க்’ வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *