லொறி மீது கார் மோதி கோர விபத்து – கர்ப்பிணி உட்பட 7 பேர் பலி!

பிரசவத்திற்காக காரில் வைத்தியசாலை செல்லும் வழியில் நடந்த கோர விபத்தில் கர்ப்பிணி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா – கர்நாடக மாநிலம் கலபுரஹு மாவட்டம் அலண்ட் நகரை சேர்ந்தவர் இஃப்ரானா பேஹம் (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று (27) காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால், குடும்பத்தினர் இஃப்ரானா பேஹமை பிரசவத்திற்காக கார் மூல கலபுரஹாவில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அந்த காரில் கர்ப்பிணி இஃப்ரானா பேஹம் (25), அவரது உறவினர்களான ரூபியா பேஹம் (50), ஜெயஹுன்பி (60), முனீர் (28), முகமது அலி (38), சௌகித் அலி (29) என மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர்.

கலபுரஹாவில் உள்ள வைத்தியசாலை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தபோது சவலஹு என்ற கிராமம் அருகே உள்ள சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் காரும், லொறியும் சாலையை விட்டு விலகி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி இஃப்ரானா பேஹம் உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

லொறி மீது கார் மோதிய விபத்தில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *