கண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்ததை விவரிக்கிறார் மீட்கப்பட்ட பெண்!

கண்டி, பூவெலிக்கடை, சங்கமித்தா மாவத்தயிலுள்ள ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் கைக்குழந்தை மற்றும் கணவன், மனைவி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (20) அதிகாலை 5.00 மணியளவில் 5 மாடிக் கட்டமொன்று பூமிக்குள் தாழிறியங்கியதால் அதன் இடிபாடுகள் காரணமாக அதற்கு அருகில் இருந்த ஹோட்டலொன்றின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் ஒன்றரை மாத குழந்தை ஆகியோர் மிகவும் பரிதாபகரமான வகையில் உயிரிந்துள்ளனர்.

மேலும் குறித்த ஐந்து மாடி கட்டிடத்தின் நுழைவாயிலைத் தவிர முழு கட்டடமும் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதேவேளை, நேற்று அதிகாலையளவில் குறித்த 5 மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டடம், முன்னாள் பஸ்நாயக்க நிலமேவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து பொலிஸார் வாக்குமூலமொன்றை பெற்றுள்ளனர்.

குறித்த ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்த போது இடிபாடுகள் காரணமாக அதற்கு அருகிலே இருந்த மற்றும் இரு கட்டடங்களும் இடிந்து வீழ்ந்துள்ளது. உயிரிழந்த தம்பதியினர் மற்றும் குழந்தை ஆகிய மூவரும் இதில் ஒரு கட்டடத்தில் வசிப்பவர்கள் என, கண்டி பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தெரிவித்தார்.

உயிரிழந்தவர், சரிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்திற்கு அருகில் ஹோட்டலொன்றை நடாத்தி வந்துள்ளதோடு, அந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு அறையிலும் மனைவியின் தாய் மற்றும் மற்றுமொரு பெண்ணொருவரும் மற்றொரு அறையிலும் தங்கியிருந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாரிய மீட்புப் பணிகளைத் தொடர்ந்து ஒன்றரை வயது குழந்தை மீட்கப்பட்டு, கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

இச்சம்பவத்தில், மற்றைய அறையில் தங்கியிருந்த மரணமடைந்த பெண்ணின் தாய் மற்றும் அங்கு பணி புரிந்த பெண் ஒருவர் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கிய சடலங்களைத் தேடும் பணியில் சுமார் 50 இராணுவம் விமானப்படை வீரர்கள் கண்டி மாநகர தீயணைக்கும் பிரிவுவைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஈடுபட்டிருந்தது.

இச்சம்பவத்தில் சமில பிரசாத் (35), அச்சலா ஏகநாயக்க (32) மற்றும் அவர்களது ஒன்றரை மாத குழந்தை ஆகியோர்களே இடர்பாடுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் அச்சலா ஏகநாயக்கஒரு வழக்கறிஞரும் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளருமாவார் எனவும் தெரியவருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே சம்பவ இடத்திற்குச் வந்ததோடு, கட்டடம் அங்கீகாரத்துடன் கட்டப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான புவியியலாளர் சமந்த போகாஹபிட்டி இது தொடர்பில் தெரிவிக்கையில், இடிந்து வீழ்ந்த கட்டடம் ஒரு பள்ளமான பகுதியில் அமைந்துள்ளது என்றும் இது இயற்கையான நிலச்சரிவினாலா அல்லது கட்டுமானத் தரத்தில் குறைபாட்டினாலா இடிந்து வீழ்ந்ததா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உயிரிழந்த கணவன், மனைவி ஆகியோர் கட்டடத்தினுள், கொன்கிரீட் தூண் மற்றும் சுவரின் உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளதோடு, குறித்த கொன்கிரீட் தூண் வெட்டப்பட்டு உடல்கள் வெளியே எடுத்ததாக, கண்டி மாநகர தீயணைப்பு படையின் பொறுப்பதிகாரி சி.எஸ். பெரேரா கூறினார்.

உயிரிழந்த அச்சலா ஏகநாயக்கவின் தாயார் ஜெயந்தி ஏகநாயக்க (60) இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“நான் ஹோட்டலில் பணிபுரிந்த பெண் ஒருவருடன், ஹோட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். மகனும் மகளும் குழந்தையும் மற்ற அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதிகாலை 5.00 மணியளவில் ஒரு பெரிய அதிரும் சத்தம் கேட்டது. எதுவும் தென்படவில்லை. எமது அறையின் சுவர் இடிந்து எமது கட்டிலின் அருகிலேயெ வீழ்ந்தது. நாலா பக்கவும் எதுவும் தெரியவில்லை. தொலைபேசி கையில் சிக்கியது. அதில் 119 ஐ அழைத்து வீடு இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்தேன். சிறிது நேரத்திலேயே பொலிஸார் அங்கு வந்தனர். ஒரு குழு கயிறுடன் இறங்கி எங்கள் இடத்திற்கு வந்து எங்களை அழைத்துச் சென்றனர். எனது மகளும் அவரது கணவரும் இருந்த அறை முற்றாக தரைமட்டமாக இருந்தது.” என அவர் கூறினார்.

(எம்.ஏ. அமீனுல்லா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *