மறைந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை நிறுவிய தொழிலதிபர்!
தமிழ்நாட்டில் மதுரை சேர்ந்த 74 வயது தொழிலதிபர் சேதுராமனின் மனைவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். சேதுராமனின் மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
அப்போதிருந்து சேதுராமன் தனது மனைவியின் வெற்றிடத்தை நிரப்ப சிரமப்பட்டார். இதனையடுத்து தனது மனைவி இறந்த 30 நாளில் அவருக்காக 6 அடி உயரத்தில் வீட்டிலேயே தத்ரூபமாக சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
பச்சை நிற சேலை அணிந்து பிச்சைமணி அம்மாள் உயிரோடு இருக்கும் வகையில் சிலையானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டள்ளது. இதுகுறித்து பேசிய சேதுராமன், முதலில் நான் அரசு சுகாதார ஆய்வாளராக பணியாற்றினேன். பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவதற்காக எனது அரசு வேலையை விட்டுவிட்டேன். அப்போது நான் பல முறை நிதி இழப்புகளை சந்தித்தேன்.
ஆனால் அவள் எப்போதும் சிறந்த நண்பரை போலவே என்னுடன் இருந்தாள், மிகக் கஷ்டமான அந்த வாழ்க்கை சூழலில் எனது மனைவி கொடுத்த ஊக்கத்தாலேயே நான் உயர்ந்த நிலையை அடைந்தேன். தற்போது சொந்தமாக மதுரையில் ரத்த வங்கி, மூன்று பெரிய திருமண மண்டபங்களை வைத்திருக்கிறேன். எனது 48 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் என் மனைவியை ஒரு நாள் கூட பிரிந்து இருந்ததில்லை என உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.