கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எரிப்பதா புதைப்பதா? விமலின் பதில்!
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை எரிப்பதா அல்லது புதைப்பதா? என்பதை காட்டிலும் உயிர்களை பாதுகாப்பதே அவசியமாக உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலைமையை காணொளியாக உருவாக்கி சர்வதேசத்தில் தெளிவுபடுத்தல்களை முன்னெடுத்து வருகின்றது.
இதிலும் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதா புதைப்பதா என சில இனவாதிகள் பிரச்சினைகளை உருவாக்கினர். உயிரிழந்ததன் பின்னர் புதைப்பதா எரிப்பதா என்பது அல்ல முக்கியம்.
உயிரிழப்புகள் ஏற்படாது தடுப்பதே மிக முக்கியமாகும். உலகிலேயே மிக குறைந்த உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டிருப்பது சிறந்த அரச மற்றும் தலைமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதாரணமாக உள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆளுகையில் தற்போதைய நிலையில் நாங்கள் இருப்பதே போதுமானது.
ஆணைக்குழுக்களுக்கு வரும் பாதுகாப்பு அதிகாரிகள் புலனாய்வு அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் கூறும் கதைகளில் நாடு இந்த அளவில் மீதப்படுத்தப்பட்டிருப்பதே மகிழ்ச்சிதான்” என அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.