இலங்கையில் சர்ச்சையாகும் பசுவதை தடைச் சட்டம்

இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சியிலுள்ள எந்தவொரு உறுப்பினரும், இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் என்ற ரீதியிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

இலங்கையில் மாடறுப்பு நடவடிக்கைகளை தடை செய்யுமாறு சுதந்திரத்திற்கு பின்னரான காலம் முதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த கோரிக்கைகளை இன்று வரை நிறைவேற்ற முடியவில்லை என பலரும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டுக்கு அண்மித்த ஆசனங்கள் இருக்கின்றமையினால், இந்த யோசனையை விரைவில் நிறைவேற்ற முடியும் என அரசாங்கம் கூறுகிறது.

உள்நாட்டு மாட்டிறைச்சி தேவையை பூர்த்தி செய்வதற்காக, மாட்டிறைச்சிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *