இலங்கையில் புதிய அரசமைப்பு எவ்வாறு அமையும்?

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பில் 12 சரத்துகளைதவிர ஏனைய அனைத்து விடயங்களும் புதிய அரசியலமைப்பின் ஊடாக மாற்றியமைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வாரஇதழொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி பௌத்த மதம், தேசிய கீதம், தேசியக்கொடி மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவற்றில் தாக்கம் செலுத்தக்கூடிய 12 சரத்துகளில் எவ்வித மாற்றமும் வராது எனவும், ஏனைய சரத்துகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது நீக்குவதற்கோ நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் போதும் என்பதால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டிய தேவை ஏற்படாது எனவும் அந்த நிபுணர் குறிப்பிட்டார் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை 21 ஆவது திருத்தச்சட்டமாக கருதாமல் புதிய அரசியலமைப்பாகவே அடையாளப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் நிபுணர்குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடவுள்ளது.

புதிய அரசியலமைப்பை டிசம்பர் மாதத்துக்குள் இயற்றமுடியும் எனவும், அதனை 2021 ஜனவரியில் அரசாங்கத்திடம் கையளிக்ககூடியதாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நிபுணர் கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், பல்துறையினரிடமும் புதிய அரசியலமைப்பு குறித்து கருத்துகள், ஆலோசனைகள் உள்வாங்கப்படவுள்ளன.

நன்றி – மவ்பிம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *