சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்படும்?

சிறுபான்மைக் கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுபான்மைக் கட்சிகளே கடந்த மகாண சபைத் தேர்தல் முறையை பிரச்சினையாக்கினர் எனவும் சிறுபான்மைக் கட்சிகள் உண்ணாவிரதம் இருந்தும் கூச்சலிட்டும் எதிர்ப்பைத் தெரிவித்தாலும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்மலையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “19ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரச்சினைக்குள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை வெறுமனே அரசியல் ரீதியான ஆணைக்குழுக்கள் மாத்திரமேயாகும்.

அப்போது பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டமையும் அரசியல் நோக்கம் கருதியதே. இவ்வாறான சிக்கல் நிறைந்த 19ஐ நீக்கி 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும்.

உண்மையாகவே 19ஆவது திருத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரத்தைக் குறைத்து ரணிலின் அதிகாரம் கூட்டப்பட்டது. 19ஐக் கொண்டுவர தனிப்பட்ட நோக்கமே காரணமாகும். ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே 19இன் மூலம் இரட்டை குடியுரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட முடியாது எனக் கூறப்பட்டது.

அது கோட்டாபய ராஜபக்ஷவை இலக்குவைத்து செய்யப்பட்டது. அதாவது, ராஜபக்ஷக்களுக்கு எதிராக செயற்படவும், மைத்திரியின் அதிகாரத்தைக் குறைத்து ரணில் பலம்பொருந்தியவராக மாறவே 19ஆவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. எனவே, அதனை ஒழித்து 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும். அதற்காகவே மக்கள் பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள்.

அதேபோல், புதிய தேர்தல் முறையொன்றை மக்கள் கோரியுள்ளனர். ஆகவே, ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பர். இதற்கு சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.

சிறுபான்மைக் கட்சிகளே கடந்த மகாண சபைத் தேர்தல் முறையையும் பிரச்சினையாக்கியுள்ளனர். ஆனபடியால் சிறுபான்மைக் கட்சிகள் அதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தும் கூச்சலிட்டும் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். ஆனால் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *