கூட்டமைப்பின் தலைமைப்பதவியில் மாற்றம் வருமா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியில் இரா.சம்பந்தன் நீடிப்பாரென்றும், ஊடகப்பேச்சாளர் பதவியில் மாற்றம் வரவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
இதன்படி தமிழ்க் கூட்டமைப்பின் புதிய ஊடகப்பேச்சாளராக புளொட் தலைவர் சித்தார்த்தன் அல்லது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நேற்று கூடியது. இதன்போது சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் கூட்டமைப்பின் பதவி நிலை மாற்றங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளது.
எனினும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று (21) முற்பகல் மீண்டும் கூடவுள்ளது. இதன்போது இறுதி இணக்கப்பாடு எட்டப்படலாம் என கூட்டமைப்பு எம்.பியொருவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் சம்பந்தன் நீடிக்கவேண்டும் என விரும்பும் பங்காளிக்கட்சிகள், ஊடகப்பேச்சாளர் பதவி வேண்டும் என வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.